Wednesday, May 30, 2012


நியாயமா கோபிநாத் ? ********************************* நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் (பவர் ஸ்டார் ) சீனிவாசனிடம் கோபி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து பலரும் தமது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள் . இந்த நிலையில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது . பத்து வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் 'ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகள்' என்ற பெயரில் டிவி நிகழ்ச்சிகளைப் பற்றி நானா வாரவாரம் எழுதுவேன் . அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் ஒரு கபடி வீரரும் சின்னத்திரை நபர் பாஸ்கியும் எதிர் எதிர் நிலையில் வாதம் செய்தார்கள் .கபடி கிரிக்கெட் இரண்டில் எந்த விளையாட்டு உசத்தி என்பதுதான் டாபிக் . நிகழ்ச்சி நடத்துனராக இதே கோபிநாத் , கபடி வீரர் மிகவும் கண்ணியமாக தனது கருத்துக்களை எடுத்து வைக்க, பாஸ்கியோ கிரிக்கெட்டுக்கு ஆதரவாகப் பேசுவதை விட்டு விட்டு கபடியையும் கருப்பாக உள்ள அந்த கபடி வீரரையும் கிண்டல் செய்தே பேசிக் கொண்டிருந்தார் . கோபிநாத் அதைக் கண்டிக்கவே இல்லை . நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அதீத கோபம் . மறுவாரம் தேவி வார இதழ் சின்னத்திரைக் குறிப்புகள் நிகழ்ச்சியில் என் நியாயமான கோபத்தை கட்டுரையாக வடித்தேன் . இதில் பாஸ்கியைக் கண்டிப்பதை விட , இதை அனுமதித்த கோபிநாத் தான் பெரிய குற்றவாளி என்று எழுதினேன் . காரணம் , நியாயம் இல்லை என்றாலும் பாஸ்கி ஒரு தரப்புக்கு பேசுகிறார் . கோபிநாத்தோ நிகழ்ச்சியை நடத்துபவர் . எப்படி ஒரு பத்திரிக்கையில் நிருபர் எழுதும் கருத்துக்களுக்கு ஆசிரியரே பொறுப்பாக ஆகிறாரோ , அது போல பாஸ்கி பேசிய விசயங்களுக்கு கோபியே பொறுப்பு என்று எழுதினேன் . பிறகு ஒருமுறை முதன் முதலாக கோபியை சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது நான் யாரென்று தெரிந்ததும் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக கோபி என்னிடம் மன்னிப்பு தெரிவிக்கும் விதத்தில் பேசினார் . ஒரு நிகழ்ச்சி நடத்துனராக என்னை செழுமைப் படுத்தியதில் ஜீவ குமாரனின் சின்னத்திரைக் குறிப்புகளுக்கு பெரும் பங்கு உண்டு என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டதாக எல்லாம் எனக்கு செய்திகள் வந்தன அது வளரும் கோபிநாத் . ஆனால் இன்று இருப்பவர் வளர்ந்த கோபிநாத் . வேறு என்ன சொல்ல?

Wednesday, May 23, 2012

ராஜ்ய சபாவில் ஒரு சக்களத்தி சண்டை **************************************** மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு பாராளுமன்றத்துக்குப போகிறவர்கள் மட்டுமல்லாது , தேர்தல் மற்றும் ஆரவார அரசியல் இவற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் , திறமை, ஆர்வம் இருக்கலாம் . அவர்களையும் ஆட்சிக் கட்டிலில் பயன்படுத்தி , அதன் மூலம் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாநிலங்களில் மேலவையும் மத்தியில் ராஜ்ய சபையும் உருவாக்கப் பட்டது. ஒரு நிலையில் அந்த நோக்கமே பலகீனமாகி , கீழ் சபை செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவாவது இந்த ராஜ்யசபா பயன்பட்டது . பின்னர் இன்னும் சீரழிந்து... ஆள்வோருக்கு வேண்டியவர்களை கவுரவப் படுத்த் , அவர்களின் சமூக அக்கறை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ராஜ்யசபையில் இடம் கொடுக்கப் பட்டது . அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் . ஆள்வோருக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும் . அவ்வளவுதான் . அதனால் இப்போது இன்னும் நிலைமை மோசம் .! கீழ் சபையில் மேசை நாற்காலிகளை உடைக்கும் எம். பிக்களே பரவாயில்லை என்று ஆகிவிட்டது ராஜ்யசபையில் நடக்கும் ஒரு கூத்தினைப் பார்க்கும்போது . . குற்றப் பின்னணி உள்ளவர்கள் எம் பிக்களாக இருப்பதே அவமானம் என்ற நிலையில், ராஜ்ய சபாவிலோ ஒரு படி மேலே போய், இப்போது சக்களத்தி சண்டையே நடந்து கொண்டி இருக்கிறது . ராஜ்யசபைக்கு இப்படி ஒரு சிறப்பைக் கொடுத்திருப்பவர் ஜெயாபச்சன் . அமிதாப் பச்சனின் மனைவி . இந்த சக்களத்தி சண்டைக்குப் ;பின்னால் ஒரு காதல் , ஒரு திருமணம் , ஒரு ரகசியக் காதல் , ஒரு பிரிவு , அதன் பின் எழுந்த பகை எல்லாம் இருக்கிறது . 1970 களில் அமிதாப் பச்சன் இந்திப் பட உலகில் சூப்பர் ஸ்டார் ஆகக் கொடிகட்டிப் பறந்த போது (அப்போதைய) இந்தி நடிகை ஜெயா பாதுரியோடு காதல் ஏற்பட்டது . இருவரும் இணைந்து நடித்த சஞ்சீர் , அபிமான் . ஷோலே போன்ற படங்கள் பெருவெற்றி பெற , இந்த ராசியான ஜோடிக்குள் காதல் வந்தது . இவர்கள் வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்து , 1973 ஜூன் மாதம் மூன்றாம் தேதி (கலைஞர் வாழ்த்து அனுப்பினாரா?) திருமணம் செய்து கொண்டனர் . ஜெயா பாதுரி ஜெயா பச்சன் ஆனார் . மிக உயரமான அமிதாப்புக்கும் மிகக் குளமான ஜெயா பச்சனுக்கும் வந்த காதல் , உடல் பொருத்தங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதல் என்று அப்போது இந்தியா முழுக்க சிலாகிக்கப் பட்டது . தூங்காதே தம்பி தூங்காதே என்ற தமிழ் படத்தில் கூட, நடிகை சுலக்ஷனாவிடம் கமல்ஹாசன் "நீ ரொம்ப குள்ளம் எனக்கு பொருத்தமாக இல்லை" என்று சொல்ல , அதற்கு பதிலாக சுலக்ஷ்னா சொல்லும் " அமிதாப் ரொம்ப உயரம் . ஜெயா பாதுரி ரொம்ப குள்ளம் . அவங்க கல்யாணம் கட்டிக் கொண்டு ஊரு மெச்ச வாழலியா?" என்ற வசனம் தமிழகத்தில் கூட கைதட்டலோடு ரசிககப் பட்டது . ஆனாலும் அமிதாப்பும் ஜெயாபச்சனும் ஒரேயடியாக ஊரு மெச்ச வாழவில்லை . காரணம் இந்தி நடிகை . ரேகா . நம்ம காதில் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் . 1976 ஆம் ஆண்டு தோ அஞ்சனே என்ற படத்தில் அமிதாப்புடன் முதன் முதலில் ஜோடியாக நடித்தார் ரேகா. அதே வருடத்தில் இருவரும் இணைந்து நடித்த முக்குவாதா சிக்கந்தர் என்ற படம் பெரும் வெற்றி பெற்றது . அமிதாப் --ரேகா ராசியான ஜோடி ஆனார்கள் . அதோடு போயிருந்தால் கூட நம்ம ராஜ்யசபா அசிங்கப் பட்டிருக்காது . இருவருக்கும் இடையே காதல் வந்தது ; (ரேகா சுமாரான உயரம்). அமிதாப் பலநாட்கள் ரேகா வீட்டிலேயே தங்கினார் . பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின ."அமிதாப்தான் என் கணவர்" என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் ரேகா .ஜெயா பச்சன் கொதித்து எழுந்து மோதினார் .. ஒரு படப் பிடிப்பில் ரேகாவின் மேகப் அறைக்குள் நுழைந்து ஜெய பச்சன் சண்டை போட , இருவரும் கைகலந்ததாகவும் அப்போது மும்பை (சரி .. பம்பாய் ) ப் பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன . 1981 யாஷ் சோப்ராவின் சில் சிலா என்ற படத்தில் ஜெயா பச்சன் அமிதாப்பின் மனைவியாகவும் ரேகா அமிதாப் பின் காதளியாகவுமே நடித்தனர் .. அதுதான் ரேகா அமிதாப் இணையின் கடைசி படம் . (இது யாஷ் சோப்ராவின் குசும்பு ) அதன் பின்னரும் மோதல் நிற்கவில்லை . "இனி ரேகா என் கண்ணெதிரில் வந்தால் செருப்பால் அடிப்பேன் "என்று ஜெயா பச்சனும் , "ஜெயாவை பார்த்தால் கடித்துக் குதறுவேன் "என்று ரேகாவும் 'மிக கண்ணியமாக ' பேட்டி கொடுத்த நாட்களும் உண்டு . அதன் பின்னர் சுமார் 20 வருடம் ௦ அடங்கிப் போயிருந்த சண்டையை மீண்டும் தூண்டிய பெருமை, நம்ம ராஜ்யசபவையே சேரும் . முன்பே சொன்னது போல , யாரை வேண்டுமானாலும் ராஜ்ய சபா எம்பியாக ஆக்கலாம் என்ற புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சி மூலம் ஜெயா பச்சன் ராஜ்ய சபா எம்பியானார் . . அதற்கு எதிர்கட்சியாக இருந்த காரணத்தாலோ என்னவோ , காங்கிரஸ் அந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் . ஜெயாபச்சனின் 'குடும்ப எதிர்க்கட்சியான' ரேகாவை ராஜ்யசபா எம்பியாக்கியது காங்கிரஸ் . (நல்ல அரசியல்) ஐயோ... பத்திகிச்சு ! "அவையில் ஜெயா பச்சனின் இருக்கை எண் 91 . ரேகாவின் இருக்கை எண் 99 ..இதற்கே "ரேகாவுக்குப் பக்கத்துப் பக்கத்தில் உட்கார முடியாது "என்றார் ஜெயா பச்சன் (ஒரு வேளை அடுத்தடுத்த இருக்கை வந்திருந்தால் சொன்ன படியே அடித்தும் கடித்தும் கொண்டிருப்பார்களோ என்னவோ ?). மாற்று இருக்கை வேண்டும் என்று 143 எண் இருக்கையைகே கேட்டு வாங்கிக் கொண்டார் ஜெயா பச்சன் . .ராஜ்யசபா எத்தனை ஏக்கரில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் என்பதை அவர் சொல்லவே இல்லை இதோடு முடிந்திருநதால் கூட .பரவாயில்லை . சரி விட்ட குறை ....(அமிதாப் ) தொட்ட குறையாக கோபம் இருக்கும் என்று நினைத்து விடலாம் . ஆனால் அடுத்து நடந்ததுதான் கோளாறு . ரேகா ராஜ்யசபாவில் எம் பியாகப் பதவி ஏற்றுக் கொண்டது வழக்கப் படி ராஜ்யசபா டிவியில் ஒளிபரப்பப்பட்டது அப்போது அவையில் அமர்ந்திருந்த ஜெயா பச்சனையும் டிவியில் காட்டினார்களாம் . இதற்குப் போய் ஆத்திரமடைந்த ஜெயாபச்சன் , ராஜ்ய சபா டிவி ஒளிபரப்புச் செயலாளர் மீது '"என்னை தேவை இல்லாமல் காட்டினார்கள் " என்று குற்றம் சாட்டிப் புகார் கொடுத்துள்ளார் . தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் அந்த டிவி ஒளிபரப்பாளர்கள்; ஒரு நடிகையாக இருந்தவர் தன் முகத்தைக் காட்டியதற்காக கோபப் படும் அதிசயம் எல்லாம் நம்ம ராஜ்யசபாவில்தான் நடக்கும் ஜெயலிதா தலைமை ஏற்கும் விழாவுக்கு (ஒருவேளை ) கலைஞர் வந்து அமர்ந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு பாராட்டு வாசிக்கப் படும்போது கலைஞரின் முக பாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும், ஒரு விழாவில் விஜய்க்கு விருது வழங்கினால் அப்போது அங்கு இருக்கும் அஜீத்தின் முகபாவனை எப்படி இருக்கும் என்று காட்டுவதும் ஊடகப் பணியின் ஓர் அங்கம் . ஒரு வேளை இவர்கள் எல்லாம் அப்படி ஒரு விழாவுக்கு வருவதையே கண்ணியமாக தவிர்ப்பர்களே தவிர , "என்னை ஏன் காட்டினாய்?' என்று நேரடியாக புகாரெல்லாம் செய்ய மாட்டார்கள் . ஆனால் ஜெயா பச்சனோ ராஜ்யசபாவை சக்களத்தி சண்டைக் களமாக மாற்றுகிறார் . அங்கு பணியாற்றுபவர்களையும் உள்ளே இழுத்து விடுகிறார் ."இந்த பக்குவம் கூட இல்லாத இவர்களை குறை சொல்வதா ? அல்லது இவர்களை எல்லாம் உறுப்பினராக்கிய அரசியல் கட்சிகளைச் சொல்வதா" என்று வேதனைப் படுகிறார்கள் நியாயமான உறுப்பினர்கள் . பேசாமல் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மேலவையைக் கலைத்தது போல , ராஜ்ய சபாவையும் கலைத்து விடலாம் தப்பே இல்லை .

Sunday, April 1, 2012

மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....


அண்மையில் மல்லிகை மகள் இதழுக்காக ராமராஜனுடன் ஒரு சந்திப்பு ....
*******************************************

வாழ்க்கை என்பது ...
*************************** மனம் திறக்கும் (கி)ராமராஜன்




நடிகர் ராமராஜன் .....
தமிழ் சினிமாவில் வானத்தில் இருந்து குதித்ததாக கருதிக் கொண்ட பெரிய மனிதர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, பாமரத்தனமும் மண் வாசனையும் கொண்ட ஓர் எளிய மனிதன்,வெள்ளித் திரையில் விஸ்வரூபம் எடுத்த வரலாற்றின் முகவரி ....

இயல்பான நடையுடை பாவனைகளால் சூப்பர் ஸ்டார்களையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவு வெற்றி அடைந்த அதிசயத்துக்கு சொந்தக்காரர் ,

நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஏற்றத்தை மட்டும் அல்ல.... அதே வேகத்தில் யோசிக்கக் கூட முடியாத சரிவுகளையும் சந்தித்த நவீன தியாகராஜ பாகவதர் .

ஆனாலும் ஒரு அட ....!

பதினொரு வருடங்களுக்கு பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்த மேதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அன்று அந்தக் காட்சி ! . இன்று மார்க்கெட்டில் உள்ள பல நடிகர்களுக்கு கூட காண முடியாத காட்சி அது . ஊர்ப்புறங்களில் இருந்து எல்லாம் வேனை எடுத்துக் கொண்டு கொடிகட்டிக் கொண்டு கரகாட்டக்காரன் போன்ற படங்களின் பாடல்களை உரத்து ஒலித்துக் கொண்டு சென்னை வந்து , விழா நடந்த அரங்கினை கலக்கிய மாறாத ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது .

ராமராஜனின் இன்றைய பொருளாதார சூழலில் காசு கொடுத்து அவர்களை திரட்டி இருக்க அவரால் முடியாது . அது தானாக வந்த ரசிகர் கூட்டம் என்பதால் எழுந்த ஆச்சர்யம் அது .

மேதை படமும் வெளியாகி விட்டது . அது ஒரு புறம் இருக்க ராமராஜனோடு பேசுவது இன்னும் கூட சுவையான விசயமாகவே இருக்கிறது .

நீங்கள் கிராமிய நாயகனாவே நடித்து பேர் வாங்கியது திட்டமிட்டதா ? அதுவாகவே அமைந்ததா?

நான் எந்த திட்டமும் இடவில்லை . சுமார் நாற்பது படங்களில் உதவி , இணை இயக்குனர் .. அப்புறம் ஐந்து படங்களின் இயக்குனர் என்று வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது , என்னை கதாநாயகனாக வைத்து படம் இயக்கலாம் என்று மறைந்த இயக்குனர் அழகப்பனுக்கு தோன்றியிருக்கிறது . கதை சொல்ல எஸ் என் ரவி என்பவரை அனுப்பி வைத்தார். மெரீனா கடற்கரையில் உட்கார்ந்துதான் கதை கேட்டேன் . அவர் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் முழு படத்தையும் சொல்லி முடித்த விதம் அற்புதம் . அது கிராமமா நகரமா என்று நான் பார்க்கவில்லை . அதில் நடிக்க வேண்டும் என்று தோன்றியது . அது ஒரு கிராமத்துக் கதை .அது நம்ம ஊரு நல்ல ஊரு என்ற பெயரில் படமாகி வெற்றி பெற்றது . அடுத்து கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் .அது பெரும் வெற்றி பெற்றது .அதுவும் கிராமியப் படம் .

அது மட்டும் இல்லாம , நம் நடிப்பில் என்ன தனித்தன்மை கொண்டு வரலாம் என்றுநான் யோசித்த போது புரட்சித் தலைவர் . நடிகர் திலகம் , ரஜினி சார , கமல் சார் இவர்களைப் போல எனக்கு பெரிதாக ஒன்றும் தனித் தன்மையாக அமையவில்லை . சரி ....ஊரில் நாம் இருந்த மாதிரி அதே குமரேசனின் (ராமராஜனின் இயற்பெயர் ) நடையுடை பாவனைகளையே நடிப்பில் காட்டலாம் என்று தீர்மானித்தேன் . அது கிராமியப் படங்களுக்குதானே செட் ஆகும் . அதனால் அப்படியே நான் கிராமத்து நாயகனாக ஆனேன் .
நான் நகர்ப் பின்னணியில் நடித்தது ரெண்டே படங்கள்தான் .

உங்கள் சொந்த ஊரான மேலூரில் ஒரு டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிப்பவராக வாழ்ந்த போது வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டீர்கள்?

பெரிதாக ஒன்றும் இல்லை .ஆனால் சினிமா மீது ஆசை . தலைவரின் எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் சினிமா ஷூட்டிங் நடப்பதை காட்சியில் காட்டுவார்கள் . அதில் ட்ராலி தள்ளுபவர்களை எல்லாம் பார்க்கும் போது 'இது மாதிரி ஒரு வேலையை சினிமாவில் செய்து பிழைத்தால்கூட போதும்' என்று தோன்றியது . செத்துப் போன பின்னும் நம் முகம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் . அது போட்டோவாக மட்டும் இருக்க கூடாது .அவ்வளவுதான் சார் என் லட்சியம் . சினிமா கொட்டாயில் வேலை பார்த்தால் சினிமா பார்க்க காசு தரத் தேவை இல்லை . திரும்ப திரும்ப ஒரே படத்தை கூட பல தடவை பார்க்கலாம் . அதனால்தான் அந்த வேலை .

சென்னைக்கு கிளம்பிய முதல் அனுபவம் எப்படி இருந்தது ?
ஒரு நிலையில் மெட்ராஸ் கிளம்பும் ஆசை அதிகம் ஆனது . என்னால் தாங்க முடியவில்லை . சினிமாவில் நடிக்க சென்னை போகிறேன் எனறால் வீட்டில் விடமாட்டார்கள் . கொட்டகையில் வேலை பார்க்க அனுமதி பெற்றதே பெரிய விஷயம் .அப்போது என் சின்னம்மா மகன் கோபால் டெல்லியில் இருந்தார் . அவருடன் இருந்து வேலை பார்க்க டெல்லி போவதாக அனுமதி பெற்று , அவரோடு டெல்லி போய் மூணு மாசம் அங்கே இருந்தேன் . அவருக்கு மெல்ல என் ஆசையை புரிய வைத்து டெல்லியில் இருந்து சென்னை வந்தேன் .
முதன் முதலில் இயக்குனர் காரைக்குடி நாராயணன் , அடுத்து காஜா பின்னர் ராஜசேகர் பின்றோரிடம் பணியாற்றி பிறகு எங்கள் இயக்குனர் ராம நாராயணிடம் பணியில் சேர்ந்து பிறகு அவர் சொந்தப் படத்தையே இயக்கும் அளவுக்கு வந்தேன் . அப்புறம்தான் கதாநாயகன் ஆனேன் .

மிகுந்த உயரத்தில் வசதியாக இருக்கும் போது கூட ஒரு பத்திரிக்கை உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்டபோது பழைய சோறும் வெங்காயமும் என்று சொன்ன உங்கள் பதிலில் எந்த போலித்தனமும் இல்லை . எப்படி வந்தது எந்த எளிமை ?

சார் .....என்னால் பந்தா பண்ண முடியாது .எனக்கு அது தெரியாது . எனக்கு கடைசிவரை அது வரவில்லை . நான் விரும்பவும் இல்லை . எளிமையாக இருப்பது கஷ்டம் இல்லாமல் சுகமாக இருந்தது . அதுதான் எனக்கு முடியும் . இன்னிக்கும் கூட அதான் சார் .

நீங்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது பெரிய பெரிய பட நிறுவனங்கள் எல்லாம் உங்களை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்க முன்வந்தபோது அதை மறுத்து பல படங்களை இழந்தீர்கள் . புதியவர்களை தயாரிப்பளார் ஆக்கி விட்டீர்கள் . விளைவாக உங்களுக்கு என்று ஒரு பின்புலம் இல்லாமல் போய்விட்டது .உங்கள் கருத்து தவறு என்று அன்று ரஜினிகாந்தே கூறியதாக கூட ஒரு தகவல் உண்டு . பெரிய நிறுவனங்களை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் இப்படி வீழ்ந்திருக்க மாட்டீர்கள் அல்லவா ?

சார் .. என்ன தான் எண்ணைய தேச்சுகிட்டு மண்ணுல விடிய விடிய பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் .

அப்புறம் ,,,, அப்ப நான் அப்படி செய்ததுக்கு காரணம் உண்டு . பெரிய தயாரிப்பாளர்களிடம் பணம் முன்பே நிறைய இருக்கு .நாம இல்லாட்டியும் அவங்க கெட்டுப் போயிட மாட்டாங்க . அதுக்கு பதிலா , புதுசா தயாரிப்பளார் ஆக ஆசைப் படறவங்களை நாம கைதூக்கி விட்டா , நாலு புது தயாரிப்பாளர் வருவாங்க . சினிமா நல்லா இருக்கும் . இது ஒரு காரணம் .

ரெண்டாவது ..நான் படத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் சிகரெட் குடிக்கிறது தண்ணி அடிக்கறது போல நடிக்க கூடாதுன்னு தீர்மானமா இருந்தேன் . ஒரே ஒரு படத்துல மட்டும் ஆரம்பத்துல தண்ணி அடிக்கிற மாதிரி நடிச்சுட்டு நான் பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும் . பெரிய தயாரிப்பாளர் இயக்குனர் படங்கள்ல நடிக்க போகும்போது அவங்க அப்படி நடிக்க சொன்னா மறுக்க முடியுமா? புரட்சித் தலைவருக்கு அந்த தைரியம் இருந்தது . நமக்கு அது இல்லை .
மணிரத்னம் சார் டைரக்ஷன்ல நானும் ஸ்ரீதேவியும் ஜோடியா நடிக்கற வாய்ப்பு கூட எனக்கு அப்ப வந்தது . ஏவி எம் மேனா திரையரங்க மேலாளர் என்கிட்ட அந்த படத்தை ஒத்துக்க சொன்னார் . மணிரத்னம் சார் குடிக்கிற மாதிரி ஒரு சீன் வச்சார்னா அவர்கிட்ட கிட்ட போய் குடிக்கிற மாதிரி நடிக்க முடியாது னு சொல்ல முடியுமா ? பெரு கெட்டுப் போயிடும் .அதான் மறுத்துட்டேன் .

நான் பண்ணினது சரியானு தெரியல . ஆனா தப்புன்னு எனக்கு இப்பவும் தோணல . என்ன பண்ணினாலும் நல்ல நேரம் இருந்தா நல்லது நடக்கும் . கெட்ட நேரம் வந்தா அதையும் அனுபவிச்சுதான் ஆகணும் .

எம் ஜிஆரின் முகத்தை திரையரங்கில் அண்ணாந்து பார்தது பரவசப் பட்ட வாழ்க்கை உங்கள் ஆரம்ப வாழ்க்கை . ஆனால் உங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஒரு அமைச்சர் வீட்டு திருமணத்தை விட்டு விட்டு அவர் வந்தார் . அன்று உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது ?

(உணர்ச்சிவசப்படுகிறார் ) நெனைச்சுப் பாத்தாலே சிலிர்க்குது ... நளினியை நான் திருமணம் செய்தபோது எங்களுக்கு பல மிரட்டல்கள் வந்தன . உண்மையில் எங்களால் சமாளிக்க முடியவில்லை . தாலி கட்டியதும் நேராக எம்ஜிஆர் காலில் விழுந்து விட முடிவு செய்தேன் . அன்று அவர் ஓசூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் இருந்தார் . நாங்கள் கிளம்பிப் போவதற்குள் அவர் மீட்டிங்கை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டார் . நாங்களும் சென்னை வந்தோம் . ராமாவரம் தோட்டத்துக்கு போனோம் . அது ஒரு மாலை நேரம், சந்திக்க அனுமதி கிடைத்தது .

நான் திரையில் பார்த்தே சிலிர்த்த உருவத்தின் முன்னாள் நான் .! அருகில் அவரது துணைவியார் ஜானகி அம்மையார் . சமோசா டீ வரவழைத்துக் கொடுத்தார் தலைவர் சோபாவை விட்டு இறங்கி அவர் காலடியில் உட்கார்ந்து விட்டேன் . அவர் சொல்லியும் எழ மனம் வரவில்லை . அவரைப் பற்றி நான் மெய் சிலிர்த்து பேசியதை அன்போடு சிரித்தபடியே கேட்டார் . எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று உறுதி கொடுத்தார் .

'நீங்கள் வருவதாக இருந்தால் ரிசப்ஷன் வைப்பேன்' என்றேன் .அவர் ஒரு தேதி கொடுத்தார் .சந்தோஷமாக வந்து ஏற்பாடுகள் செய்தோம்..ஆனால் அதே தேதியில் அன்றைய அமைச்சர் கே ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமணம இருப்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது . வரமாட்டார் என்றே நினைத்தோம் .

திடீர் என வந்தார் . அசந்து போனேன். இதில் ஆச்சர்யம் என்னன்னா , முதல்வர் அமைச்சர் வீட்டு திருமணத்துக்குதான் வருவார்னு போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் அங்கதான் இருந்தது . ஆனா அவர் எளிமையா என் திருமண வரவேற்புக்கு வந்து ஒரு உறவினர் போல அங்கு இருந்ததை மறக்கவே முடியாது . (மவுனம்)

ஒரு கிராமியப் பின்னணியில் உறவுகளோடு பிறந்து வளர்ந்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை படு தோல்வியில் முடிந்தது. உங்கள் மகள் திருமணம் கூட நீங்கள் இல்லாமலே நடந்தது . எப்படி சமாளித்தீர்கள் ? சமாளிக்கிறீர்கள் ?

ஒத்து போகல சார் . நானும் நளினியும் பிரியா வேண்டி வந்தது . குழந்தைகளும் அவங்களோடதான் இருக்கணும்னு கோர்ட் தீர்ப்பாயிருச்சு . ஒரு வேளை தீர்ப்பு எனக்கு சாதகமா வந்து 'உங்கள் குழந்தைகளை நீங்க அம்மாவிடம் அனுப்ப வேண்டியது இல்லை'ன்னு சொல்லி இருந்தா கூட , வாரம் ரெண்டு நாள் அவங்க வீட்டுக்கு நானே என் பிள்ளைகளை கண்டிப்பா அனுப்பி இருப்பேன் சார் . ஏன்னா, நம்ம ஈகோ அப்புறம் .ஆனா குழந்தைகளுக்கு அம்மாவும் வேணுமே ... (கண் கலங்குகிறார் ..) ஆனா அவங்க அனுப்பல ... எனக்கு தாங்கவே முடியல . பழகிக்கிட்டேன் . திடீர்னு மகள் அருணாவுக்கு கல்யாணம் முடிவு ஆனப்ப, ஒரு தடவை வந்தாங்க . நல்லாத்தான் எல்லாரும் பேசினாங்க . மறுபடியும் நான் பாக்க முயன்றப்ப முடியல . அப்புறம் வரவும் இல்ல . அதையும் தாங்கிக்கிட்டேன் .

என் வாழ்க்கையே சினிமாவுக்குன்னு ஆயிப் போச்சு .... டிக்கெட் கிழிச்ச காலத்துல இருந்து இன்னிவரைக்கும் அதான் . அது என்னை இன்னும் இயக்குது . அதனால தப்பிச்சுக் கிடக்குது என் தனி மனுஷ வாழ்க்கை .

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தது அரசியல் லாபத்துக்க்காகத்தானே ...?

சத்தியமா இல்ல சார். இன்னைய விசயங்களை விடுங்க .அத நம்ப மாட்டீங்க .. ஆனா... நான் இயக்கிய முதல் படம் மண்ணுக்கேத்த பொண்ணு .அன்னிக்கு அம்மாவும் அரசியல்ல இல்ல . நானும் பிழைப்புக்காக போராடுற ஒரு புதுமுக இயக்குனர்தான் . ஆனா .அன்னிக்கே படத்துல பல இடங்கள்ல தலைவரும் அம்மாவும் இருக்கற போஸ்டர்களைதான் பயன்படுத்தினேன் .அப்பவே என்னை பொறுத்தவரை தலைவரின் வாரிசு அம்மாதான் .

அவ்வளவு ஏன்.... தலைவர் மரணத்துக்கு பிறகு அதிமுக ரெண்டா ஒடஞ்ச போது, என்னை ஜானகி அம்மா அணிக்கு வரச் சொல்லி வற்புறுத்தினாங்க . ஆனா மறுத்துட்டேன் . அம்மா பின்னாடிதான் நின்னேன் .

என் மேல அவங்க காட்டின அன்பு கொஞ்சமா சார் . எனக்கு அருண் --அருணா ரெட்டைக் குழநதைகள் பிறந்தப்ப மருத்துவமனைக்கு வந்து ரெண்டு குழந்தைகளுக்கும் தங்க செயின் போட்டு வாழ்த்தினாங்க .நான் விபத்துல சிக்கி கைல காசும் இல்லாம உயிருக்கு போராடினப்ப , அவங்கதான் எல்லா செலவையும் பாத்து என்ன காப்பாத்தி விட்டாங்க .

கடந்த பதினேழாம் தேதி தலைவரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக தலைமைக் கழகம் போயிருந்தேன் .. என்னை பார்த்த உடனே 'உடம்பு நல்லா இருக்கா'ன்னுதான் கேட்டாங்க ..அவங்க என்னை பொறுத்தவரை மனித தெய்வம் ,,, (பேச முடியாமல் அமைதியாகிறார் )

ஒரு சாதாரண டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கிழிப்பவராக வாழ்க்கையை ஆரம்பித்த நீங்கள் ஒரு நிலையில் மதுரையின் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்சான நடனா நாட்டியா நர்த்தனா வை விலைக்கு வாங்கினீர்கள் . ஒரு நிலையில் அதை விற்கவும் செய்தீர்கள் ... எப்படி சார் தாங்கிக் கொள்ள முடிந்தது ?

(சில நொடிகள் கனத்த மவுனம் .....) எனக்கு ஒரு ஆசை இருந்தது சார் ...நடிகனாகி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த போது .... ஒரு சுமாரான திஎட்டருக்காவது ஓனர் ஆகணும்னு . ஆசை ... அதுக்குத்தான் நான் நிஜமா ஆசைப் பட்டேன் . ஆனா அவ்வளவு பெரிய தியேட்டர் காம்ப்ளக்சை வாங்க முடிஞ்சது .... பின்னாடி என்னால படங்கள் வாங்கி போட முடியல . தியேட்டர் வாடகைக்கு கூட சம்பாதிக்க முடியாத நெலமை ... அதான் .....(முற்றுப் பெறாத பதிலாகவே முடிகிறது )

பாராளுமன்ற எம்பியாகவே நீங்கள் போனது உங்கள் வாழ்கையின் உச்சம் என்று சொல்லலாமா ?

அது அம்மாவின் அருள் சார் . 1978 இல் என் சின்னம்மா மகனோடு பிழைப்பு தேடி டெல்லிக்கு போனவன் 98 இல் திருச்செந்தூர் எம்பியாகப் போனேன் . மிகக் குறைந்த வயதில் எம்பியான சிலரில் நானும் ஒருவன் .பாராளுமன்றத்தில் பெரிய பெரிய தலைவர்களை எல்லாம் நேரில் பார்த்தேன் .ஆனால் நான் எம்பியாக இருந்த அமைச்சரவையின் காலம் சில மாதங்கள் மட்டுமே .அதனால் என்னால் தொகுதிக்கு பெருசா ஒண்ணும் பண்ண முடியல .எனக்கு அந்த வருத்தம் உண்டு .

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக சரியான காரியம் எது? பெரிய தவறு எது ?
சினிமாவில் மது குடிக்கிற ---சிகரெட் குடிக்கிற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தது மிக சரியான முடிவு . . இன்றும் அதற்காக பெருமைப் படுகிறேன் . . தவறு எனறால் என் சினிமா வாழ்வில் நிறைய சொல்லலாம் . ஆனால் அது தவறு என்று அப்போது தெரியாது . இனி பேசி பயன் இல்லை . ஆனால் செய்தபோது எல்லாம் அதையும் நல்ல நோக்கத்தோடுதான் செய்தேன் . இப்போது வந்திருக்கிற மேதை படத்தின் தயாரிப்பாளர்கள் டெக்னீசியன்கள் எல்லோரும் கூட புதியக்வர்கள் தான் . பிரபலமான பெரிய ஆட்கள் இல்லை . எனக்கு அதுதான் சார் அமையுது .

இன்றும் உங்களை பார்க்க கிளம்பி வருகிற ரசிகர்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள் ?
(சுறுசுறுப்பாகிறார் ) நான் கடைசியா நடிச்ச படம் வெளிவந்து பதினொரு வருஷம் ஆகுது .ஆனாஇப்ப மேதை படத்த்கோட பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டம் என்னை வியக்க வச்சது . அது மட்டும் அல்ல . விழாவுக்கு அன்னிக்கு வந்த ஒரு ரசிகன் , என் பிறந்த நாளுக்கு என்னை நேரில் வந்து வாழ்த்த ஆசைப் பட்டு இருக்கான் .மறுபடியும் சென்னை வரஅவங்க வீட்டுல அனுமதி தரல. விஷம் குடிச்சு செத்தே போய்ட்டான் சார் . , தகவல் தெரிஞ்சு நான் துடிச்சிட்டேன் . ஓடிப் போய்ப் பார்தது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டு., முடிஞ்ச பண உதவிட செஞ்சிட்டு வந்தேன் .
இதோ என் படத்தை இப்பவும் நண்பன் வேட்டைன்னு பெரிய படங்களோட தான் ரிலீஸ் பண்ணி இருக்கேன் .
தில்லான மோகனாம்பாள் படத்துல ஒரு காட்சி வரும் . மனோரமா கிட்ட ஒருத்தன் வந்து "இன்னிக்கு மோகனாம்பாள் னு ஒரு பெரிய ஆட்டக்காரி ஆடப் போறா .. அதனால உன் ஆட்டத்துக்கு மவுசு இருக்காது "ன்னு சொல்லுவான் . அதுக்கு மனோரமா .."இருக்கட்டும் .. அதனால் என்ன ... அவங்க பெரிய மேடையில ஆடட்டும் .... எனக்குன்னு ஒரு மூலையில கெடைக்கற எடத்துல நான் ஆடிட்டுப் போறேன்" னு சொல்லுவாங்க . அதுமாதிரி எனக்கு உள்ள கூட்டத்துக்கு என் படத்தை காட்டுவோம்னு தான் சார் , நான் பெரிய படங்க கூட என் படத்தை ரிலீஸ் பண்ணினேன் . எனக்கு இந்த தைரியம் இருக்க காரணம் என் ரசிகர்கள் ...

இதுவரை என் எந்தப் படமும் பூஸ்ட் பண்ணி ஓட்டப்பட்டது இல்ல . தானாதான் ஓடுச்சு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் . நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருக்கு பிறகு, ஒரே நாளில் ஒரு கதாநாயகனாக நடித்த ரெண்டு படங்கள் வெளியாகி ரெண்டுமே நூறுநாள் ஓடின வரலாறு எனக்கு மட்டும்தான் இன்னிக்கு வரை இருக்கு . அதுக்கு காரணம் என் ரசிகர்கள் ......

....அந்த மாதிரி இருக்கற ரசிகர்களுக்கு நீங்க பதிலுக்கு என்ன பண்ணப் போறீங்க?

(துள்ளலோடு ) பண்ணனும் சார் .. ஏதாவது நல்லது பண்ணனும் ... இன்னிக்குவரை எந்த தூண்டுதலும் இல்லாம அவங்களாவே புதுசு புதுசா எனக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிச்சுட்டு எனக்கு தகவல் கொடுத்துட்டு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்காங்க ..(ஆதாரங்களைக் காட்டுகிறார் ) செய்வேன் சார். அத பத்தின யோசனையில்தான் இருக்கேன் ....

திரைத்துறையில் அடுத்து ...?

என்கிட்ட இப்ப முப்பது படங்களுக்கான கதைகள் ரெடியா இருக்கு . சுமார் 250 படப் பெயர்களை செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் . என்னைப் பொறுத்தவரை படத்துக்கு பேருதான் முக்கியம். அதே மாதிரி நான் எப்பவும் ஹீரோவாதான் நடிப்பேன் . அத மாத்திக்க முடியாது .

திருக்குறள்னா அது ரெண்டு அடிதான் இருக்கும் . அது ஏன் நாலடியா இல்லைன்னு கேட்கக் கூடாது . நாலடியார்னா அது நாலடியாதான் இருக்கும் . அது ஏன் ரெண்டு அடியா இல்லைன்னு கேட்பீங்களா? . ராமராஜன்னா ஹீரோதான் . அவன்கிட்ட போய் நீங்க ஏன் மத்த கேரக்டர்ல நடிக்க கூடாதுன்னு கேட்கக் கூடாது .

நீங்க பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழித்த காலமும் உண்டு . 'ஐநூறு ரூபா கூட கையில் இல்லை 'என்று கலங்கி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்ததும் உண்டு . வாழ்க்கை எனும் ரங்க ராட்டினத்தில் சரேலென மேலே ஏறி அதே வேகத்தில் சரிந்தவர் நீங்கள் .. உங்க பார்வையில வாழ்க்கைன்னா என்ன சார்?

சரேலென மேலே ஏறினது உண்மைதான் . ஆன மெதுவாதான் இறங்கினேன் . அதனாலேயே வலி ஜாஸ்தி .

ஒண்ணே ஒண்ணு சொல்றேன் .. எனக்கு கார்ல பயணம் பண்றதே புடிக்காது . பொதுவா பஸ் , ரயில் இல்லன்னா விமானம் இப்படிதான் பயணம் செய்வேன் . ஆனா ஒருதடவை வேற வழியில்லாம கார்ல போனேன் . என்ன ஆச்சு ? கொடுமையான விபத்த்துல சிக்கி உயிர் பிழைக்கவே கஷ்டம்னு ஆகி, கடைசியில ஒரு வழியா மறுஜென்மம் எடுத்தேன் . நான் என்ன விரும்பியா கார்ல போனேன் . ஆனா போக வேண்டி வந்தது இல்லையா ?

அதே மாதிரித்தான் .... வாழ்க்கையில நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் கஷ்டம் வரணும்னு இருந்தா வரத்தான் செய்யும் . அதை யாரும் மாத்த முடியாது . ஆனா அதை தைரியமா எதிர்கொண்டு ஜெயிக்கணும் ... இதுதான் வாழ்க்கை .

Friday, January 27, 2012

இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா? --சு. செந்தில் குமரன்




இந்த வாரம் புதிய தலைமுறை வார இதழில் நான் எழுதி அட்டைப் படக் கட்டுரையாக வந்திருக்கும் "இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா " என்ற கட்டுரையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் . நன்றி



இழந்தது தேவிகுளம், பீரிமேடு மட்டும்தானா?
*******************************************

சு. செந்தில் குமரன்


நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

மேலும் முழுமையான தகவல்களுக்கு www.puthiyathalaimurai.com பாருங்கள் .

Sunday, June 5, 2011

# எஸ் ஜானகிக்கு வாய்ப்பு கொடுத்த பி லீலா




இன்று (06-06-2011)காலை ஜெயா தொலைக்காட்சியில் சிறப்புத் தேன்கிண்ணம் பகுதியில் தோன்றிய கவிஞர் பிறைசூடன் அவர்கள், 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்ற "சிங்கார வேலனே தேவா" பாடல் பற்றி குறிப்பிடும்போது

"பொதுவாக நாதஸ்வரமும் குரலும் இணைந்து இழையாது என்பதால் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களை வைத்து நாதஸ்வர இசைப் பகுதிகளை வாசிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்தனர் பின்னர் இசை படிக்காவிட்டாலும் இசையாகவே வாழ்கிற எஸ் ஜானகியை பாட வைத்தனர் "
என்றார் .
உண்மை .


ஆனால் இதில் மற்றோர் நெகிழ்ச்சியான விஷயமும் உண்டு .

முதலில் இந்தப் பாடலைப் பாடுவதற்கு அணுகப்பட்ட பாடகி பி லீலா அம்மையார்தான் . ஆனால் லீலா அம்மையார்
"இந்த உயரத்துக்கு என் குரல் போகாது" எ
ன்று திறந்த மனதோடு கூறியதோடு மட்டும் அல்லாமல்
" இன்றைய நிலையில் இந்த நாதஸ்வர இசைக்கு இணையாக ஒலிக்கும் குரல் ஜானகியிடம்தான் உள்ளது அவரையே பாடச் சொல்லுங்கள் "
என்று பெருந்தன்மையோடு சிபாரிசும் செய்தார் .

அதனால் பாட்டு ஜானகிக்குப் போனது .

"என்னால் பாட முடியாது' என்று கூறியதோடு லீலா அம்மா விட்டிருக்கலாம் . ஆனால் ஜானகியால்தான் முடியும்ணு சொல்லி என்னைப் பாட வச்சார் . இந்த பெருந்தன்மை வேறு யாருக்கு வரும் "
என்று பத்திரிக்கையாளனாகவும் உதவி இயக்குனராகவும் இருந்த என்னிடம் ஒருமுறை சொல்லும்போதே ஜானகியின் கண்ணில் இருந்து கரகரவென கண்ணீர் வந்ததை என்னால் மறக்கவே முடியாது

நன்றிக் கண்ணீர் !

by the by இப்ப அதெல்லாம் எங்கயாவது ஊறுதா ?